தர்மபுரியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது


தர்மபுரியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 23 Aug 2018 10:15 PM GMT (Updated: 23 Aug 2018 8:35 PM GMT)

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆகியவற்றின் சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்குகிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய அனைத்து தொழில் நிறுவனங்களும் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தகுதியான ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த முகாமில் 5–ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை தேர்வு செய்யலாம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story