மோசடி வழக்கில் சிக்கிய சிதம்பரம் சோபியா மீது மேலும் ஒரு வழக்கு


மோசடி வழக்கில் சிக்கிய சிதம்பரம் சோபியா மீது மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 25 Aug 2018 11:15 PM GMT (Updated: 25 Aug 2018 10:48 PM GMT)

மோசடி வழக்கில் சிக்கிய சிதம்பரம் சோபியா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வயலூர் சிலுவைபுரத்தை சேர்ந்தவர் சோபியா (வயது 35). இவர் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் புதுவை வம்பாகீரப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலையரசன் என்பவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தான் வங்கி பணி தொடர்பான பயிற்சி மையம் நடத்தி வருவதாகவும், இங்கு பயிற்சி பெற்று வந்த புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 15 பேரிடம் சோபியா, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனியை சேர்ந்த முருகதாஸ் ஆகிய இருவரும் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 63 லட்சம் வாங்கி மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சோபியாவை இவ்வழக்கில் போலீசார் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறை காவலர்கள் மூலம் அதற்கான நகல் உத்தரவு சோபியாவிடம் வழங்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த முருகதாஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story