வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறப்பு


வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 25 Aug 2018 11:30 PM GMT (Updated: 25 Aug 2018 10:54 PM GMT)

நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்துள்ள நிலையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய பங்கு இந்த ஏரிக்கு உண்டு. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரி வறண்டது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த இந்த தண்ணீர் கடந்த மாதம் 26-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியை வேகமாக எட்டியது. தொடர்ந்து கீழணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,200 கனஅடி வீதம் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் காவிரியின் கடைமடை பகுதியான வீராணம் ஏரிக்கு கடந்த மாதம் 27-ந் தேதி வந்தது. அன்று முதல் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 60 முதல் 74 கனஅடி வரை தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சேத்தியாத்தோப்பு அணைக் கட்டில் சேமித்து வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து வாலஜா மற்றும் பெருமாள் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 2,100 தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் மாலையில் நீர்மட்டம் 46.25 அடியாக உயர்ந்து கடல் போல் காட்சி அளிக்கிறது. வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கிடையில் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) விஜயா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story