வருமான வரியை முறையாக செலுத்த வேண்டும்


வருமான வரியை முறையாக செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 26 Aug 2018 9:45 PM GMT (Updated: 26 Aug 2018 7:44 PM GMT)

வருமான வரியை முறையாக செலுத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு வருமான வரித்துறை இணை ஆணையர் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்,


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் வருமானவரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் வருமான வரித்துறையும், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய இந்த கூட்டத்திற்கு வணிகர் சங்க தலைவர் கே.ஜே.ரமேஷ் தலைமை தாங்கினார். விழுப்புரம் வருமான வரித்துறை இணை ஆணையர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.


அப்போது, வருமான வரி செலுத்துவது தொடர்பாகவும், குறிப்பாக காலம் கடந்து வருமானவரி செலுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள், அதனால் வியாபாரிகள் செலுத்த வேண்டிய அபராதம் குறித்தும், இதனை தவிர்க்க முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது குறித்தும் அறிவுரை வழங்கி பேசினார்.
மேலும் வரி செலுத்தாதவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

கூட்டத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் ஆனந்ததீர்த்தன், செங்குட்டுவன், ஆய்வாளர் ரவி, வணிகர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் கலைமணி, தலைமை நிலைய செயலாளர் முகமதுஅக்பர்அலி, அமைப்பு செயலாளர் நிர்மல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story