அம்மாப்பேட்டை அருகே 2 மாணவர்கள் சாவு: ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு மாணவரின் உடல் மீட்பு


அம்மாப்பேட்டை அருகே 2 மாணவர்கள் சாவு: ஆற்றில் மூழ்கிய மேலும் ஒரு மாணவரின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 27 Aug 2018 10:30 PM GMT (Updated: 27 Aug 2018 8:45 PM GMT)

அம்மாப்பேட்டை அருகே ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் ஏற்கனவே இறந்தனர். மேலும் ஆற்றில் மூழ்கிய ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டது.

அம்மாப்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை மார்வாடி தெருவை சேர்ந்தவர் மகேஷ். இவர் அம்மாப்பேட்டையில் தையல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் விவேக் (வயது15). அம்மாப்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கிருபாகரன் (15). அம்மாப்பேட்டை திருமலை நகரை சேர்ந்த வியாபாரி சிவானந்தத்தின் மகன் செல்வகுமார் (15). விவேக், கிருபாகரன், செல்வகுமார் ஆகிய 3 பேரும் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் விடுமுறை நாள் என்பதால் அம்மாப்பேட்டை அருகே திருக்காட்டூர் கிராமத்தில் உள்ள வெண்ணாற்றுக்கு குளிக்க சென்றனர்.

அப்போது வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரில் இருந்து ஆற்றில் குதித்தபோது 3 பேரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி மாயமான 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விவேக், கிருபாகரன் ஆகியோர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது. இதில் விவேக்கின் உடலை எக்கல் என்ற பகுதியிலும், கிருபாகரனின் உடலை மகிமாலை இருகரை பகுதியிலும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இவர்களுடைய உடல்கள் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவர் கிருபாகரன் ஆற்றில் மூழ்கி இறந்த தகவலை கேட்ட அதிர்ச்சியில் அவருடைய பாட்டி ராஜேஸ்வரி (80) கதறி அழுதார். இந்தநிலையில் அவர் திடீரென தனது வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் கீழே இறக்கி பார்த்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்தநிலையில் ஆற்றில் மாயமான மாணவர் செல்வகுமார் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது. அப்போது ஆற்றின் தடுப்பு சுவரின் கீழ் ஆழமான பகுதியில் செல்வகுமாரின் உடல் சிக்கியிருந்ததை கண்டுபிடித்த மீட்புக்குழுவினர் அவரின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட செல்வகுமாரின் உடல் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஆற்றில் மூழ்கி இறந்த விவேக், கிருபாகரன், செல்வகுமார் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story