காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்


காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Aug 2018 10:45 PM GMT (Updated: 27 Aug 2018 9:44 PM GMT)

ஜேடர்பாளையம் படுகை அணை காவிரி ஆற்றில் குளித்த தொழிலாளி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் படுகை அணையில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், காவிரி மற்றும் ராஜா வாய்க்காலிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ஜேடர்பாளையத்தில் அண்ணா பூங்காவிற்கு மட்டுமே செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பாண்டமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 32). இவர் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டையில் ஒரு அட்டை தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக செய்து வருகிறார். முத்துகிருஷ்ணனும், அவருடைய நண்பர்களான கண்ணன் (22) மற்றும் ஜேடர்பாளையத்தைச் சேர்ந்த பாலா (25) ஆகிய 3 பேரும் நேற்று ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு வந்து காவிரி ஆற்றில் குளித்தனர்.

அப்போது தண்ணீர் அதிகமாக ஓடியதால் முத்துகிருஷ்ணன் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை அறிந்த அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் பரிசலில் சென்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரம் ஆகிவிட்டதாலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட முத்துகிருஷ்ணனை தொடர்ந்து தேட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தேடும் பணி இன்று (செவ்வாய்க் கிழமை) தொடர்ந்து நடை பெறும் என தெரிகிறது.

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story