வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Sep 2018 10:15 PM GMT (Updated: 2 Sep 2018 9:44 PM GMT)

குமாரபாளையத்தில் வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை, மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கவுரி தியேட்டர் பைபாஸ் அருகில் வசிப்பவர் செல்லமுத்து (வயது 59). இவர் குமாரபாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை செல்லமுத்துவின் குடும்பத்தினர் வெளியூர் சென்றனர். செல்லமுத்து வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார்.

இரவு 9 மணியளவில் செல்லமுத்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லமுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுபற்றி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு சண்முகம், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிந்திருந்த ரேகைகளை அவர்கள் பதிவு செய்தனர். செல்லமுத்து குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story