தக்கலை அருகே விபத்து: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சாவு


தக்கலை அருகே விபத்து: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி சாவு
x
தினத்தந்தி 5 Sep 2018 11:00 PM GMT (Updated: 5 Sep 2018 5:39 PM GMT)

தக்கலை அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 7 மாத கர்ப்பிணி இறந்தார். கணவன், மகன் கண் எதிரே நடந்த இந்த பரிதாப சம்பவம்.

பத்மநாபபுரம்,

நித்திரவிளை அருகே உம்மினிகாரவிளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்(வயது 29). இவர் திருவனந்தபுரத்தில் ஒரு போட்டோ லேபில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி(23). இவர்களுக்கு 1 வயதில் அபி என்ற மகன் உள்ளான். தற்போது நந்தினி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதற்காக தக்கலை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் பரிசோதனைக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று காலையில் பரிசோதனைக்காக அபிலாஷ் தனது மோட்டார்சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகயுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர்கள் நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரவிபுதூர்கடை பகுதியில் வந்தபோது, பின்னால் மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென அரசு பஸ், மோட்டார்சைக்கிளின் பின்பகுதியில் மோதியது.

இதில் நிலைதடுமாறிய அவர்கள், மோட்டார்சைக்கிளுடன் சாலையில் விழுந்தனர். அப்போது, பஸ்சின் பின் சக்கரம் நந்தினியின் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த நந்தினி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அபிலாசும், அபியும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நந்தினியை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்தி பஸ்சை பறிமுதல் செய்து, டிரைவரான குலசேகரம் பகுதியை சேர்ந்த சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் மற்றும் மகன் கண் எதிரே 7 மாத கர்ப்பிணி விபத்தில் இறந்த சம்பவம் நித்திரவிளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story