குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்


குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Sep 2018 9:30 PM GMT (Updated: 6 Sep 2018 1:39 PM GMT)

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை,

குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பதவி விலக வேண்டும்

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

தமிழக அரசு ஊழலின் உச்சத்தில் உள்ளது என்பதை சி.பி.ஐ. சோதனை மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. குட்கா ஊழல் விவகாரத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பணியில் இருக்கும் போலீஸ் டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும். இல்லை என்றால் தமிழக அரசு 2 பேரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு காவிரி பாசன பகுதிகளை பாலைவனமாக்க முயற்சி செய்கிறது. தமிழகத்தில் இயற்கை வளங்களை அழிக்க கூடிய நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான அரசு, மத்திய அரசு என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மாணவி சோபியா

மத்திய அரசு தூண்டுதலின் பேரில் மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் இந்த விளையாட்டால் மாணவியின் வாழ்க்கை பாழாகும் வாய்ப்பு உண்டு. எனவே மாணவி சோபியா மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு வைகோ கூறினார்.


Next Story