தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணம் கொள்ளை


தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 6 Sep 2018 11:09 PM GMT (Updated: 6 Sep 2018 11:09 PM GMT)

கூரியர் நிறுவன ஊழியர்கள் போல் நடித்து, வீடு புகுந்த வாலிபர்கள் தாய், மகளை கட்டிப்போட்டு ரூ.62 லட்சம் நகை, பணத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

மும்பை,

மும்பை, கார் பகுதியில் உள்ள கோவிந்த் பவன் குடியிருப்பில் 5-வது மாடியில் வசித்து வருபவர் கோஹினூர் பானு (வயது38). இவரது கணவர் தொழில் அதிபர். நேற்று முன்தினம் காலை கோஹினூர் பானுவின் கணவா் வெளியே சென்று விட்டார். வீட்டில் அவரும், அவரது மகளும் மட்டும் இருந்தனர்.

காலை 9.30 மணியளவில் வாலிபர் ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அடித்தார். கோஹினூர் பானு கதவை திறந்து வாலிபரிடம் விசாரி த்தார். அப்போது அவர் உங்கள் கணவருக்கு கூரியர் பார்சல் வந்து இருப்பதாக கூறினார்.

இந்தநிலையில் வாலிபர் மற்றும் அவருடன் இருந்த மேலும் 2 பேர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் கத்தி முனையில் மிரட்டி கோஹினூர் பானு, அவரது மகளை நாற்காலியில் கட்டி வைத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.62 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்தநிலையில் கொள் ளையர்கள் தப்பிஓடிய பிறகு பெண் உதவி கேட்டு சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் கூரியர் நிறுவன ஊழியர்கள் என கூறி கட்டிடத்திற்குள் நுழைந்தது தெரியவந்தது.

போலீசார் கூரியர் நிறுவன ஊழியர்கள் போல வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story