ரெயில் விபத்துகளில் ஒரே நாளில் 17 பேர் சாவு : போலீசார் தகவல்


ரெயில் விபத்துகளில் ஒரே நாளில் 17 பேர் சாவு : போலீசார்  தகவல்
x
தினத்தந்தி 7 Sep 2018 10:59 PM GMT (Updated: 7 Sep 2018 10:59 PM GMT)

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு வழித்தடத்தில் ரெயில் விபத்துகளில் நேற்று முன்தினம் மட்டும் 17 பேர் பலியானதாக ரெயில்வே போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

மும்பை,

மும்பையின் உயிர்நாடியாக கருதப்படும் மின்சார ரெயிலில் தினமும் சுமார் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கூட்ட நெரிசலால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதியும் என விபத்துகளில் சிக்கி தினமும் சராசரியாக 9 பேர் பலியாகி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய இரு வழித்தடங்களிலும் ரெயில் விபத்துகளில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளதாக ரெயில்வே போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். இவர்களில் இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவர்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள நாலச்சோப்ரா ரெயில் நிலைய பகுதிக்கு வந்த அந்த இளம் ஜோடியினர் திடீரென அந்த வழியாக வந்த ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

வசாயில் ஓடும் ரெயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்து பலியானார். மத்திய ரெயில்வே வழித்தடத்தில் சகாட் மற்றும் கசாரா இடையே 35 மற்றும் 45 வயது மதிக்கத்தக்க 2 பேர் தண்டவாளத்தை கடந்த போது, ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

Next Story