முகப்பேர் மேற்கில் கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை நண்பர்கள் 3 பேர் கைது


முகப்பேர் மேற்கில் கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை நண்பர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sep 2018 10:45 PM GMT (Updated: 8 Sep 2018 6:39 PM GMT)

முகப்பேர் மேற்கு பகுதியில், கார் டிரைவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர்,

சென்னை முகப்பேர் மேற்கு, பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்(24), அமீர்(24), மதன்(25). நெருங்கிய நண்பர்களான இவர்கள் 4 பேரும் கார் டிரைவர்கள் ஆவர்.

ஜெயகுமாருக்கும், மதனுக்கும் அடிக்கடி சிறு, சிறு தகராறுகள் நடந்து வந்தது. அவர்களை மற்ற 2 நண்பர்களும் சமாதானம் செய்து வந்தனர். கடந்த வாரம் இதேபோன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள் 4 பேரும் கலந்துகொண்டனர். அப்போது மீண்டும் மதனுக்கும், ஜெயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.

அதன்பிறகு ஜெயகுமாரின் வீட்டுக்குச்சென்ற கிருஷ்ணன், இந்த தகராறு குறித்து பேசலாம் என்று கூறி அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அங்கு அமீர் மற்றும் மதன் இருவரும் இருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

அப்போது அவர்களுக்குள், இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அமீர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜெயகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததால் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் உயிருக்கு போராடிய ஜெயகுமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயகுமார் பரிதாபமாக இறந்தார். கொலையான ஜெயகுமாருக்கு தனலட்சுமி(21) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இது குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த அமீர், கிருஷ்ணன், மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story