3 மாதமாக குடிநீர் கிடைக்காததால் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்


3 மாதமாக குடிநீர் கிடைக்காததால் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:00 PM GMT (Updated: 8 Sep 2018 9:53 PM GMT)

3 மாதங்களாக குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே வடச்சேரி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பலர் தொலைதூரங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.

எனவே இதனை தவிர்க்க கிராமத்திற்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலையில் திரண்டனர். அவர்கள் அந்த வழியாக வாணியம்பாடியிலிருந்து ஆம்பூர் சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த உமராபாத் போலீசார் மற்றும் பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடந்த இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பஸ்சை அவர்கள் விடுவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story