விராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு


விராலிமலை தொகுதியில் புதிய ஆழ்துளை கிணறு- நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் : தம்பிதுரை பேச்சு
x
தினத்தந்தி 9 Sep 2018 12:25 AM GMT (Updated: 9 Sep 2018 12:25 AM GMT)

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆழ்துளை கிணறு, நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றனர்.

அப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிரை பேசியதாவது:-

கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் விராலிமலை தொகுதியில் உள்ள கல்குடி, பூதகுடி மற்றும் வடுகப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 33 கிராமங்களில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

மேலும் விராலிமலை தொகுதியில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். கிராமங்களில் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் தனிநபர் இல்ல கழிவறை கட்டுவதற்கு அரசு ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது. இதேபோன்று கழிவுகளை சுகாதாரமான முறையில் வெளியேற்றும் வகையில் தரைமட்ட உறிஞ்சு குழிகள் அமைத்து தரப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் கழிவறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும். காலனி பகுதிகளில் பழுதடைந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு பட்டா இடம் இருப்பின் பசுமை வீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் குறித்து அலுவலர்கள், பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

சாலை வசதிகள், பஸ் வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் ஊர்களுக்கு கூடுதலாக பஸ் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விராலிமலை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விராலிமலை தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கிராமப் புறங்களில் புதிய கலையரங்கங்கள், பயணிகள் நிழற்குடைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று பொதுமக்களின் பிற கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் பொதுமக்களின் ஒவ்வொரு கோரிக்கை மனுக்களின் மீதும் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆறுமுகம் எம்.எல்.ஏ., திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகண்ணன், அட்மா குழுத்தலைவர் பழனியாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story