பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 9 Sep 2018 11:15 PM GMT (Updated: 9 Sep 2018 6:57 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சிகள் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு அழைத்து விடுத்துள்ளனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த நிலையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதேபோல பாம்பனுக்கு கேரளாவில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்வதற்காக வரும் கம்பெனிகள் கடந்த சில நாட்களாக வரவில்லை. இதனால் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு பாம்பன் மீனவர்களும் ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேசுவரம் பகுதியில் 800 படகுகளும், பாம்பனில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல மண்டபத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


Next Story