காவேரிப்பட்டணம்: கிணற்றில் கார் பாய்ந்து 2 சிறுமிகள் பலி


காவேரிப்பட்டணம்: கிணற்றில் கார் பாய்ந்து 2 சிறுமிகள் பலி
x
தினத்தந்தி 12 Sep 2018 11:30 PM GMT (Updated: 12 Sep 2018 9:49 PM GMT)

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து 2 சிறுமிகள் பலியானார்கள். 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் கார் பாய்ந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் திப்பம்பட்டி காரிமங்கலம் சாலையில் உள்ள நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). விவசாயி. இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டார்.

காரை ராஜேந்திரன் (33) என்பவர் ஓட்டினார். தங்கவேல், ரமா (30), பிரீத்தி (27), வர்ஷினி (7), ரத்திகா (3) ஆகியோர் காரில் இருந்தனர். கார் போச்சம்பள்ளி தாலுகா பாரூரை அடுத்த நாகர்குட்டை என்ற இடத்தில் நேற்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய கார் சாலையோரம் உள்ள விவசாய கிணற்றின் கரையில் இருந்த கற்கள் மீது மோதி நின்றது. அந்த விவசாய கிணற்றில் 50 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. கற்கள் மீது கார் மோதி நின்றதை கண்டதும் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கார் கதவை திறந்து கொண்டு தங்கவேல், ராஜேந்திரன், ரமா, பிரீத்தி ஆகியோர் வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காரில் இருந்த வர்ஷினி, ரத்திகா ஆகியோர் வெளியே குதிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் கிணற்றுக்குள் பாய்ந்து விட்டது. அதில் இருந்த வர்ஷினி, ரத்திகா ஆகியோர் காருடன் கிணற்றில் விழுந்தனர். இதனை நேரில் பார்த்த தங்கவேல் மற்றும் உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என சத்தம் போட்டனர். அதற்குள் கார் கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டது.

இதுபற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாக சென்றவர்களும் கிணற்றின் அருகில் வந்து திரண்டனர். இதனால் அந்த பகுதியில் கூட்டமாக காணப்பட்டது. பரபரப்பும் நிலவியது. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாரூர் போலீசாரும் அங்கு வந்தடைந்தனர். தண்ணீரில் மூழ்கிய காரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதற்காக கிரேன் கொண்டு வரப்பட்டது. அந்த கிரேன் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பரிசல் கொண்டு வந்து தேடினர்.

கிணற்றை சுற்றி மரங்கள் வளர்ந்து உள்ளன. அந்த கிணற்றில் தேடியபோது காரில் 2 சிறுமிகளும் இல்லை. கார் கிணற்றில் பாய்ந்த வேகத்தில் கதவு திறந்து கிணற்று தண்ணீரில் 2 சிறுமிகளும் விழுந்து மூழ்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிணற்று தண்ணீரில் தீவிரமாக தேடத்தொடங்கினர்.

அப்போது சிறுமி வர்ஷினி பிணமாக மீட்கப்பட்டாள். ரத்திகாவை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணியளவில் சிறுமி இறந்தாள். 2 சிறுமிகளின் உடலை பார்த்து அருகில் இருந்தவர்கள் கதறி அழுதனர்.

இதற்கிடையே இரவு 7 மணியளவில் காரை கிணற்றில் இருந்து வெளியே மீட்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து இதுகுறித்து செல்லம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் அளித்த புகாரின் பேரில், பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story