கிணற்றில் குதித்த 7-ம் வகுப்பு மாணவி சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை கைது


கிணற்றில் குதித்த 7-ம் வகுப்பு மாணவி சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை கைது
x
தினத்தந்தி 12 Sep 2018 11:09 PM GMT (Updated: 12 Sep 2018 11:09 PM GMT)

கொங்கணாபுரம் அருகே கிணற்றில் குதித்த 7-ம் வகுப்பு மாணவி இறந்து போனார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

எடப்பாடி,

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை அடுத்து உள்ள புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அரிசிபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். கயிறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ரம்யா (வயது 13), வசந்தி (12), பவித்ரா (11) என்ற மகள்களும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இதில் வசந்தி அரிசிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இவளது வகுப்பில் சமுத்திரம் பகுதியை சேர்ந்த ரீனா (35) என்பவர் ஆசிரியையாக பாடம் நடத்தி வந்தார். இவரது மணிபர்சில் இருந்து ரூ.600 காணாமல் போனது குறித்து இவர் நேற்று மாணவி வசந்தியிடம் விசாரித்துள்ளார். பின்னர் உணவு இடைவேளையின் போதும் ஆசிரியை ரீனா, வசந்தியிடம் மீண்டும் பணம் குறித்து கேட்டுள்ளார்.

இதில் பயந்து போன வசந்தி அருகில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இதுகுறித்து வசந்தியின் தந்தை தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உறவினர்களுடன் பள்ளிக்கு வந்து பார்த்தபோது வசந்தி இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து தங்கவேலுவின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் அங்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தங்கவேலுவின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆசிரியை ரீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை ரீனா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story