தண்ணீர் வழங்காததை கண்டித்து பெரியாறு பாசன விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்


தண்ணீர் வழங்காததை கண்டித்து பெரியாறு பாசன விவசாயிகள்  சாலை மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:00 PM GMT (Updated: 14 Sep 2018 1:02 PM GMT)

சிவகங்கை மாவட்டத்திற்கு பாசனத்துக்கு தண்ணீர் வழங்காததைக் கண்டித்து பெரியாறு பாசன விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், கால்நடைகள் மற்றும் விவசாய தேவைக்காகவும் பெரியாறு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இது வரை தண்ணீர் திறந்து விடப்படாததால் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று சிவகங்கை மாவட்ட ஷீல்டு கால்வாய் விவசாயிகள், லெசிஸ் கால்வாய் விவசாயிகள், 48–வது மடை விவசாயிகள் மற்றும் கட்டாணிப்பட்டி 1–2 விவசாயிகள் சார்பில் சிவகங்கை–மேலூர் சாலையில் உள்ள மலம்பட்டி பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க செயலாளர் முத்துராமலிங்கம், சிவகங்கை நகர் செயலாளர் ராஜேஷ்கண்ணன், திருமலை அய்யனார், நாமனூர் ரகுநாதன், திருமலை முத்துராமலிங்கம், கட்டாணிப்பட்டி சக்திமுருகன், மேலப்பூங்குடி அர்ச்சுணன், கள்ளராதினிப்பட்டி சின்னமுத்தணன், அழகமாநகரி கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்திற்கு பொதுப்பணித்துறை உதவி பொறியாளரை நியமனம் செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்டத்திற்குரிய பெரியாறு பங்கு நீரை உடனடியாக திறக்க வேண்டும், கடைமடை வரை பெரியாறு தண்ணீரை வழங்க வேண்டும், ஷீல்டு கால்வாயை சிமெண்டு கால்வாயாக மாற்ற வேண்டும், சிவகங்கை மாவட்டத்தில் கட்டாணிப்பட்டி கால்வாய், அழகமாநகரி மற்றும் நாமனூர் கால்வாய், கள்ளராதினிப்பட்டி முதல் சோழபுரம் வரை உள்ள கால்வாய், மலம்பட்டி கால்வாய், சிவகங்கை தெப்பக்குளம் கால்வாய் ஆகிய கால்வாய்களில் பெரியாறு தண்ணீரை உடனே திறக்க வேண்டும். அனைத்து கால்வாய்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகைள விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகளின் மறியல் போராட்டத்தினால் அந்த சாலை வழியாக வந்த பஸ்கள் மற்றும் வாகனங்களை போலீசார் வேறு பாதையில் திருப்பி விட்டனர். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமார், தாசில்தார் ராஜா, தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன், நகர் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story