ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:45 PM GMT (Updated: 14 Sep 2018 7:48 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் சோனியா, ராகுல், பிரியங்கா மன்னித்து விட்டார்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு,

ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஈரோட்டில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

 அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள் வாங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளது. இதை கேட்டால், அவர்கள் வாங்கும் விமானங்களில்தான் ராணுவ தளவாடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே காங்கிரஸ் ஒப்பந்தம் செய்திருந்த விமானங்களில் ராணுவ தளவாடங்கள் இல்லை என்று பொய் சொல்கிறார்கள்.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், போர் விமானத்துக்கு என்ன விலை கொடுத்தாலும் அதை சொல்ல முடியாது என்கிறார். விமானத்தின் பறக்கும் சக்தி உள்ளிட்ட ரகசியங்களை வேண்டுமானால் சொல்லக்கூடாது. ஆனால் விமானத்தின் விலையை சொல்வதில் எந்த சட்டச்சிக்கலும் கிடையாது.

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பிரச்சினையை பொறுத்தவரை நாங்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறோம். ஏற்கனவே சொல்லியும் விட்டோம். எங்கள் தலைவர்கள் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த 7 பேரையும் மன்னித்து விட்டார்கள். இனிமேல் இந்த வி‌ஷயத்தில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

குட்கா ஊழல் வி‌ஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே குற்றம் செய்து இருக்கிறார்கள். எனவே பதில் கூற முடியாமல் திணறுகிறார்கள். விரைவில் எல்லா அமைச்சர்களும் கம்பி எண்ணப்போவது உறுதி.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பல இடங்களில் உள்ளது. ஆனால் மின்வெட்டு இல்லை என்று கூறியே கிராமங்களில் தினசரி 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு செய்கிறார்கள்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.


Next Story