மூதாட்டியிடம் 30 பவுன் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு


மூதாட்டியிடம் 30 பவுன் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Sep 2018 10:45 PM GMT (Updated: 18 Sep 2018 10:16 PM GMT)

சேலத்தில் மூதாட்டியிடம் 30 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம்,

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சம்பங்கி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 80). இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (64). இவர்கள் 2 பேரும் கடந்த 8-ந் தேதி கோவைக்கு உறவினர் ஒருவரின் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன், பாக்கியலட்சுமி ஆகியோர் அங்கிருந்து நாமக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் சென்னை செல்வதற்காக நாமக்கல்லில் இருந்து சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஜங்சன் ரெயில் நிலையம் செல்வதற்காக பஸ்சில் சென்றனர். இந்த தம்பதியை பஸ்சில் இருந்த 2 பெண்கள் கண்காணித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பஸ் ஜங்சன் வந்தது. அந்த பஸ்சில் இருந்த 2 பெண்கள் சுப்பிரமணியன், பாக்கியலட்சுமி ஆகியோரிடம் நீங்கள் கீழே இறங்குங்கள், உங்களின் உடமைகளை பஸ்சில் இருந்து கீழே இறக்கி வைப்பதற்கு நாங்கள் உதவி செய்வதாக கூறினர். இதை நம்பி அவர்களும் சரி என அந்த பெண்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண்கள் உடமைகளை இறக்கி வைக்கும் நேரத்தில் மூதாட்டியின் ஒரு பையில் இருந்த 30 பவுன் நகையை நைசாக திருடிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

பாக்கியலட்சுமி திடீரென நகை பையை திறந்து பார்த் தார். அப்போது அதில் இருந்த 30 பவுன் நகையை அந்த பெண்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ் கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 30 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story