மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முன்னாள் கலெக்டரின் மகன் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முன்னாள் கலெக்டரின் மகன் பலி
x
தினத்தந்தி 18 Sep 2018 11:07 PM GMT (Updated: 18 Sep 2018 11:07 PM GMT)

கோவையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் கலெக்டரின் மகன் பலியானார். மற்றொரு விபத்தில் வங்கி மேலாளர் இறந்து போனார்.

கோவை,

 கோவை மாநகராட்சி கமி‌ஷனராக கடந்த 2006–ம் ஆண்டு பணியாற்றியவர் முத்துவீரன். பின்னர் தேனி மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்ற இவர் தற்போது பணி ஓய்வு பெற்று திருச்சியில் வசித்து வருகிறார்.

இவருடைய மகன் பிரனேஷ் பாபு(வயது 27).கோவையில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்தார். லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி இருந்தார்.

நேற்று அதிகாலை 3.15 மணி அளவில் நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்புக்கு வந்தபோது, பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மோதியது.

இதில் பிரனேஷ் பாபு தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரனேஷ் பாபுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

மகன் இறந்த தகவல் அறிந்ததும், முத்துவீரன் கோவை விரைந்து வந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த மகனின் உடலை பார்த்து அவரும், குடும்பத்தினரும் கதறி அழுதனர். முத்துவீரனுக்கு அரசு அதிகாரிகள் ஆறுதல் கூறினார்கள்.

பிரனேஷ்பாபு மீது மோதிய காரை பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(44) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் நாராயணராவ் என்பவர் உடன் வந்துள்ளார். விபத்தில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பகுதி இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் பிலிப் ஜான் (வயது 38). இவர் கோவை–திருச்சி ரோட்டில் உள்ள சவுத் இந்தியன் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். வேலை முடிந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் பிலிப் ஜான் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப் பட்டார்.

நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள வருவாய் அதிகாரி அலுவலகம் அருகே சென்ற சென்றபோது அதே வழியாக கியாஸ் சிலிண்டர் லோடு ஏற்றிச் சென்ற லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்த பிலிப் ஜான் படுகாயம் அடைந்தார். அந்த பகுதி பொது மக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வீரம்மாள், சப்–இன்ஸ்பெக்டர் ரெஜிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த பிலிப் ஜான் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். கல்யாணி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஓணம் பண்டிகை அன்றுதான் கடைசி மகள் பிறந்தாள். பிலிப் ஜானின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.


Next Story