தாரமங்கலம்: காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


தாரமங்கலம்: காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 Sep 2018 10:39 PM GMT (Updated: 19 Sep 2018 10:39 PM GMT)

தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வழங்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டுவளவு, சொட்டையன்காடு, மடிச்சாம்பட்டி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க கோரி திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேட்டூர் குடிநீர் குழாய் இணைப்பு மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விதிமுறைகளை மீறி சிலர் வீடுகளுக்கு தரைதொட்டி அமைத்து மேட்டூர் தண்ணீர் வரும் பிரதான குழாயில் திருட்டுத்தனமாக இணைப்பு மூலம் தண்ணீரை உறிஞ்சி கொள்கின்றனர். இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதன் காரணமாக 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுக்க வேண்டியுள்ளது.

எனவே திருட்டுத்தனமான இணைப்புகள் அனைத்தையும் நீக்கி, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். மனு மீது இதுவரை எந்தவிமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி மனு கொடுக்க வந்தோம். இனியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் சென்று மனு கொடுத்தனர். அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story