நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 12:37 PM GMT)

நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரியை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், நெல்லை மாவட்டம் நாங்குநேரி மூன்றடைப்பு அருகே உள்ள தோட்டாக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகள் இந்திரா (30) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன், மனைவி 2 பேரும் புனேக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த இந்திரா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே நேற்று இந்திராவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இந்திரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் இந்திராவை அழைத்தனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதில் சந்தேகமடைந்த அவர்கள் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் இந்திரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

மேலும் இந்திராவுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story