மின்சார ரெயில்களில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது


மின்சார ரெயில்களில் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 10:15 PM GMT (Updated: 21 Sep 2018 7:24 PM GMT)

ஆவடியில் மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகளிடம் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் புறநகர் மின்சார ரெயில்களில் இரவு 11 மணிக்கு மேல் செல்லும் பயணிகளிடம் அடிக்கடி செல்போன் திருடப்பட்டு வந்தன.

இதுகுறித்து பயணிகள் ஆவடி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து ஆவடி ரெயில்வே போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்காக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஆவடி மற்றும் அண்ணனூர் ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆவடி திருமலைவாசன் நகரை சேர்ந்த விக்டர் அந்தோணி (வயது 49) மற்றும் அம்பத்தூர் ராமாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் (39) என்பதும், இருவரும் ஓடும் ரெயிலில் இரவில் ஒவ்வொரு பெட்டியாக சென்று அங்கு தூங்கியபடி பயணம் செய்யும் பயணிகள் அருகில் அமர்ந்து பயணம் செய்வதுபோல் நடித்து அவர்கள் பாக்கெட்டில் இருந்து செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story