திருச்சி கே.கே.நகரில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு வக்கீல் உள்பட 5 பேர் கைது


திருச்சி கே.கே.நகரில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு வக்கீல் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 10:52 PM GMT (Updated: 21 Sep 2018 10:52 PM GMT)

திருச்சி கே.கே.நகரில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் தனபால்(வயது 58). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 18-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல் போனும் ‘சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் தனபால் எங்கே சென்றார்? என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், தனபால் வழக்கமாக செல்லும் இடங்கள் மற்றும் அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.

டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்து 18-ந் தேதி இரவு 9 மணிக்கு தனபால் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்று கண்காணிப்பு கேமராவில் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அவரது செல்போனில் கடைசியாக ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த ஒரு பெண் பேசியதும் தெரியவந்தது. அப்பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதேவேளையில் அன்று இரவு திருச்சி நம்பர்-1 டோல்கேட் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தனபாலின் ஏ.டி.எம். கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தது. உடனே போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது தனபாலின் ஏ.டி.எம். கார்டை கொண்டு 2 பேர் பணம் எடுப்பது தெரியவந்தது. எனவே, தனபால் கடத்தப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

அதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், திருச்சி கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனபாலை கடத்தி சென்றவர்களின் சிலரது செல்போன் எண்கள் கிடைத்தன. அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண் காணித்தபோது, தனபாலை கடத்திய கும்பல் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் குறிப்பிட்ட காரை துரத்தி சென்றனர்.

காட்டூர் பாப்பாக்குறிச்சி அருகே தனிப்படை போலீசார் காரை மடக்கி துப்பாக்கி முனையில் காரில் இருந்த தனபாலின் தம்பி மணியின் நண்பரான முத்துச்செல்வம்(43), உறையூரை சேர்ந்த ரத்தின குமார்(31), சென்னையை சேர்ந்த வக்கீல் பிரதீப் சரண் (24) ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், காருக்குள் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் தனபால் இல்லை. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தனபாலை ஓலையூர் காட்டு பகுதியில் கடத்தி வைத்து இருந்தது தெரியவந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த தனபாலை மீட்டனர். அங்கு தனபாலுக்கு காவலாக இருந்த பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த வீரமணி(29), உறையூரை சேர்ந்தஅருண் குமார்(25) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பிச்சுவாக்கத்தி, தனபால் கையெழுத்து போட்ட வெற்று பேப்பர்கள், தனபாலின் 2 மோதிரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பல் தலைவன் சென்னையை சேர்ந்த பூமிநாதன், காட்டூரை சேர்ந்த தமிழ், அவருடைய தம்பி தென்னரசு, பரமத்தி வேலூரை சேர்ந்த சிலம்பரசன், பாண்டி ஆகிய 5 பேரை தேடி வருகிறார்கள். இதில் ரவுடி பூமிநாதன் மற்றும் தமிழ் ஆகிய இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வசம் சிக்கியவர்களிடம் தனிப்படையினர் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

தனபால் ஆரம்பத்தில் நிலத்தரகராக இருந்து படிப்படியாக உயர்ந்து கோடீஸ்வரர் ஆனார். இதனால் அவரிடம் பணப்புழக்கம் அதிக அளவில் இருந்தது. சொந்தமாக வணிக வளாகங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளை கட்டி வாடகைக்கு விட்டதிலும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி வந்துள்ளார். இதையறிந்த சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி பூமிநாதன் என்பவர், தனபாலை தொலை பேசியில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், தனபால் தன்னால் பணம் தர முடியாது என மறுத்திருக்கிறார். இதனால், ஆத்திரம் அடைந்த ரவுடி பூமிநாதன் திருச்சி காட்டூரை சேர்ந்த ரவுடியான தனது நண்பன் தமிழ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் பூமிநாதன் மற்றும் தமிழ் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து கடந்த ஒருவாரமாக தனபாலின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.அப்போதுதான், தனபால் அடிக்கடி திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்து செல்வதை அறிந்தனர். அதன்படி, கடந்த 18-ந் தேதி இரவு ஓட்டல் அருகே இருந்து புறப்பட்டு சென்ற தனபாலை, ரவுடிக்கும்பல் தலைவன் பூமிநாதன் மற்றும் காட்டூர் தமிழ் தலைமையிலான கும்பல் காரில் தூக்கிப்போட்டு கடத்தி சென்றுள்ளது. அப்போது அவரிடம் இருந்த செல்போனை பறித்து ‘சுவிட்ச்ஆப்’ செய்துள்ளனர். கைவசம் பணம் இல்லை என்பதால், திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தனபாலின் கார்டை கொடுத்து 2 பேரை பணம் எடுத்துவர செய்துள்ளனர். பின்னர் தனபாலை ஓரிடத்தில் ரவுடிகள் அடைத்து வைத்து இருந்தனர். மேற்கண்டவை யாவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தனபாலை ரவுடிக்கும்பல் அடித்து உதைத்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. அதற்காக அவருக்கு ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில் ரவுடிக்கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Next Story