குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 5:30 PM GMT)

கொடுங்கையூரில், குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். ஆத்திரத்தில் லாரியின் முன்பக்க கண்ணாடியை பொதுமக்கள் கல்வீசி உடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுங்கைபெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எழில்நகர் பி.பிளாக்கை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் கேசவன்(வயது 25). தச்சுத்தொழிலாளி. இவர், நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் கொடுங்கையூர் குப்பைமேடு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் குப்பைமேடு நோக்கி வந்துகொண்டிருந்த குப்பை லாரி, எதிர்பாராதவிதமாக இவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது குப்பை லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கிய கேசவன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பை லாரியின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். பின்னர் அந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் அந்த பகுதியில் வேகத்தடை மற்றும் சிக்னல் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா மற்றும் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.

பின்னர் பலியான கேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குப்பை லாரி டிரைவரான எம்.கே.பி நகரைச் சேர்ந்த ரவி(36) என்பவரை கைது செய்தனர். குப்பை லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story