திருக்கடையூரில் எச்.ராஜா உருவ படத்தை எரிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 27 பேர் கைது


திருக்கடையூரில் எச்.ராஜா உருவ படத்தை எரிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 27 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 7:06 PM GMT)

திருக்கடையூரில், எச்.ராஜாவின் உருவ படத்தை எரிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கடையூர்,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று நாகை மாவட்டம், திருக் கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடந்த தனது சகோதரியின் அறுபதாம் கல்யாணத்திற்கு வந்தார். இவர் வருகையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கோவில் வாசல் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழகத்தில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

உருவ படத்தை எரிக்க முயற்சி

பின்னர் அவர்கள், எச்.ராஜாவின் உருவ படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி எச்.ராஜாவின் உருவ படத்தை எரிக்க முயன்ற 27 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார், கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் திருக் கடையூரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story