பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது
x
தினத்தந்தி 26 Sep 2018 10:45 PM GMT (Updated: 26 Sep 2018 8:18 PM GMT)

குடவாசல் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடவாசல்,

குடவாசல் அருகே உள்ள பெரும்பண்ணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளையில் விடுபட்ட விவ சாயிகளுக்கு பயிர்க்காப்பீடு தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் நிபந்தனையின்றி கொடுக்க வேண்டும். வங்கி கிளையில் நடைபெற்ற ஊழல் முறை கேடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி குடவாசல் தெற்கு ஒன்றிய விவசாயிகள் சங்கம் சார்பில் பெரும்பண்ணையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் துரைமணி தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் தம்புசாமி, மாவட்ட செயலாளர் கலியபெருமாள் ஆகியோருடன் கூட்டுறவு வங்கி செயலாளர் ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், பயிர்க்காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

இதை ஏற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றியக்குழு உறுப்பினர் இன்பநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story