கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர்கள்


கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 27 Sep 2018 11:00 PM GMT (Updated: 27 Sep 2018 4:00 PM GMT)

கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்களை, இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்கியதுடன், படகில் இருந்த மீன்களை எடுத்து சென்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் விழுந்தமாவடி வடக்கு மீனவர் காலனியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் இளம்பாரதி(வயது 23). இவருக்கு சொந்தமான புதிய பைபர் படகில் நாகை அக்கரைப்பேட்டை டாட்டா நகரை சேர்ந்த சத்தியன்(25), விழுந்தமாவடி மீனவர் காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(35), அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ்(24), மணிமாறன்(32) ஆகியோர் நேற்று முன்தினம் மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

 விழுந்தமாவடியில் இருந்து 18 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இருந்து கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு வெள்ளை நிற மாருதி சுசுகி படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர், இளம்பாரதி படகை வழிமறித்து படகில் இருந்த அனைவரையும் சரமாரியாக தாக்கினர்.


 பின்னர் படகில் இருந்த ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, செல்போன் ஆகியவற்றையும், படகில் இருந்த 50 கிலோ மீன்களையும் எடுத்து சென்றனர்.

கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த 5 பேரும் நேற்று காலை விழுந்தமாவடி கடற்கரைக்கு திரும்பி வந்தனர். அங்கு அவர்களது உறவினர்கள், மீனவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், நாகை மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் நாகை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story