தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து சாவு


தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 28 Sep 2018 10:00 PM GMT (Updated: 28 Sep 2018 10:18 PM GMT)

தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

வடலூர், 


வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 35). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று ஜெயலட்சுமி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராஜேந்திரன் வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமி உடல்நலக் கோளாறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநத்தம் அருகே உள்ள கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா மகன் பிரபு(35). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரபு, உடல் நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ததில் மஞ்சள் காமாலை இருந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த பிரபு சம்பவத்தன்று விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story