பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீர் தீ


பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீர் தீ
x
தினத்தந்தி 5 Oct 2018 10:30 PM GMT (Updated: 5 Oct 2018 8:40 PM GMT)

தண்டராம்பட்டு அருகே பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 48). இவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் அதே பகுதியில் உள்ளது. அங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் பட்டாசுகள் தயாரிப்பதற்கான பேப்பர், திரி உள்ளிட்ட மூலப்பொருட்களை தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து குடோனாக பயன்படுத்தி வந்தார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் ஜீவா வீட்டில் பட்டாசு மூலப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தண்டராம்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story