ஜெயினர் கோவில்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


ஜெயினர் கோவில்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 9:22 PM GMT)

தமிழகம் முழுவதும் உள்ள ஜெயினர் கோவில்களில் பாதுகாப்புகளை பலப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டார்.

செஞ்சி,

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் உள்ள ஜெயினர் கோவிலில் கடந்த மாதம் சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள 6 ஐம்பொன் சிலைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஜெயினர் கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் ஜெயினர்களின் தலைமையிடமான செஞ்சியை அடுத்த மேல் சித்தாமூரில் உள்ள ஜெயினர் மடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஜெயினர் மட மடாதிபதி லட்சுமிசேன பட்டாரக பட்டாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். ஜீவகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், அகிம்சை நடை ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டு கோவில்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசுகையில், பெரும்புகை ஜெயினர் கோவிலில் சாமி சிலைகள் கொள்ளை போனது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். இனிவரும் காலங்களில் கோவில் கதவுகளை தொட்டால் ஒலி எழுப்பக்கூடிய வகையில் நவீன கருவி மற்றும் கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும் என்றார்.

முன்னதாக நன்கொடையாளர்கள் சார்பில் ஜெயினர் கோவில்களுக்கு பூட்டுகள் வழங்கப்பட்டது.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜீவராஜ், மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், ஆடிட்டர் ரவிச்சந்திரன், அறங்காவலர்கள் ராஜேந்திரபிரசாத், ஜெயபால், அனந்தவிஜயன், அப்பாண்டை நடராஜன் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஜெயினர் கோவில்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சமுத்திரராஜன் நன்றி கூறினார்.


Next Story