சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்


சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:15 PM GMT (Updated: 7 Oct 2018 9:27 PM GMT)

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான சக்திவேல் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சக்திவேலை மறித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக கூறி அபராதம் விதித்ததாக தெரிகிறது.

இதுபற்றி சக்திவேல், மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னி, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் பேசினார். அப்போது சக்திவேல் மற்றும் மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னியை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட பொருளாளர் கென்னடி, நகர துணை செயலாளர் அபுபக்கர் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நான்கு முனை சந்திப்புக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகியை ஆபாசமாக பேசிய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்று தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story