வந்தவாசி: பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்


வந்தவாசி: பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Oct 2018 10:45 PM GMT (Updated: 9 Oct 2018 10:20 PM GMT)

வந்தவாசி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 8ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

வந்தவாசி,

வந்தவாசி சார்பதிவாளர் (பத்திரப் பதிவு) அலுவலகம் குறித்து வந்த புகாரின்பேரில் சோதனை நடத்துவதற்காக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வந்தனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், ரஜினிகாந்த் மற்றும் போலீசார் இடம்பெற்றிருந்தனர். பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் அவர்கள் சென்றவுடன் அலுவலகத்தின் கதவு பூட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்திலிருந்து யாரையும் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் உள்ளே செல்லவும் யாருக்கும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

பத்திரப் பதிவு செய்ய காத்திருந்தவர்கள் உள்பட அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சார்பதிவாளர் பா.கல்பனாவிடமும் விசாரணை நடந்தது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நேற்று அதிகாலை 2 மணி வரை நடந்தது. அப்போது அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணமாக ரூ.1லட்சத்து 8ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். இது பற்றி துறை ரீதியான நடவடிக்கைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.


Next Story