திருப்பூர் மாவட்டம் முழுவதும் முறைகேடாக செயல்படும் பார்களை மூடவேண்டும்; டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு


திருப்பூர் மாவட்டம் முழுவதும் முறைகேடாக செயல்படும் பார்களை மூடவேண்டும்; டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Oct 2018 11:00 PM GMT (Updated: 10 Oct 2018 6:51 PM GMT)

திருப்பூர் மாவட்டம் முழுவதும் முறைகேடாக செயல்பட்டு வரும் பார்களை மூட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில், செயலாளர் அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கேயம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, வெள்ளகோவில், முத்தூர் மற்றும் மூலனூர் உள்ளிட்ட இடங்களில் 238 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுடன் இணைந்து 97 மதுபான பார்கள் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இதுதவிர மீதமுள்ள 141 மதுபான பார்கள் முறையான அனுமதியின்றியும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக புதுப்பிக்கப்படாமல் சட்டத்திற்கு புறம்பாகவும் இயங்கி வருகிறது.

பல மாதங்களாக இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த டாஸ்மாக் பார்கள் அனுமதிக்கப்பட்ட பார்களை விட அதிக நேரமும், அதில் பெரும்பாலான பார்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த பார்களின் உரிமையாளர்கள் அதனுடன் இணைந்து இருக்கும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் மதுவகைகளை மிரட்டி வாங்குகின்றனர்.

இதனால் அவ்வப்போது கடை ஊழியர்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. அரசுக்கு மறைமுகமாக மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் மதுபான பார்களை மூட நடவடிக்கை எடுப்பதுடன், அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் விதமாக முறையான அனுமதியுடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story