மல்லியம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள், ரெயில் மறியல் 97 பேர் கைது


மல்லியம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள், ரெயில் மறியல் 97 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 7:08 PM GMT)

மல்லியம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள், ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 97 பேரை போலீசார் கைது செய்தனர்.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஜங்ஷனில் இருந்து குத்தாலம் ரெயில் நிலையம் இடையே மல்லியம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவந்தது. இங்கு திருச்சி, நெல்லை, தஞ்சை ஆகிய 3 பாசஞ்சர் ரெயில்கள் மட்டுமே நின்று சென்றன. இந்த நிலையில் போதிய வருவாய் இல்லாததால் ரெயில்வே நிர்வாகத்தினர் கடந்த ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி முதல் ரெயில் நிலையத்தை மூடினர். இதனால் மல்லியம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்காமல் செல்கின்றன.

இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மல்லியம் கிராம மக்களிடம் ரெயில்வேத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், வாக்குறுதி அளித்தப்படி தற்போதுவரை ரெயில்வே துறையினர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று மல்லியம் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மல்லியம் ரெயில் நிலையத்தில் ரெயில்களும் நின்று செல்லவில்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு மல்லியம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நவாஜ்தீன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள், மல்லியம் ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார், தாசில்தார் விஜயராகவன் ஆகியோர் மேற்கண்ட இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து பொதுமக்கள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார், ரெயில் மறியலில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்பட 97 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story