சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல்


சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: குமரியில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:15 PM GMT (Updated: 10 Oct 2018 8:39 PM GMT)

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் 50 இடங்களில் அய்யப்ப பக்தர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக 486 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள மாநில அரசை கண்டித்தும், இந்து ஆகம விதிகளுக்கு முரணாக செயல்படுவதை கண்டித்தும் நேற்று தென்பாரத அய்யப்பா சேவா சமிதி சார்பில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, மீனாதேவ், தேவ், நகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பில் 12 பேர், மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக பணிமனை முன் ராஜன் உள்பட 30 பேர், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் அருகே நாகர்கோவில் தொகுதி சக்தி மகாகேந்திர பொறுப்பாளர் திருப்பதி உள்பட 11 பேர், வடசேரி சந்திப்பில் இந்து முன்னணி நகர தலைவர் நம்பிராஜன் உள்பட 30 பேர் மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.

மார்த்தாண்டம் புதிய பஸ்நிலையம் அருகில் அய்யப்ப சரண கோஷக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சரண கோஷக்குழு தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜனதா மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் ரகு, முன்னாள் ராணுவ பிரிவு துணைத்தலைவர் சரசகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 49 பேரை கைது செய்தனர்.

தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசாசோமன் தலைமை தாங்கினார். பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 135 பேரை கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சியில் பா.ஜனதா மண்டல தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 10 பெண்கள் உள்பட 28 பேரும், அம்மாண்டிவிளையில் 18 பேரும், மண்டைக்காட்டில் 9 பெண்கள் உள்பட 34 பேரும் மறியலில் ஈடுபட்டனர்.

பரசேரியில் 64 பெண்கள் உள்பட 84 பேரும், பேயன்குழியில் 6 பெண்கள் உள்பட 32 பேரும், இரணியலில் 8 பெண்கள் உள்பட 41 பேரும், திங்கள்நகரில் 16 பேரும், குருந்தன்கோட்டில் 5 பெண்கள் உள்பட 38 பேரையும் இரணியல் போலீசார் கைது செய்தனர். அருமனை சந்திப்பில் 86 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து 86 பேரையும் போலீசார் கைது செய்தனர். பத்துகாணியில் 54 பெண்கள் உள்பட 114 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கடை கூட்டாலுமூட்டில் 50 பேரும், அஞ்சுகிராமத்தில் 22 பேரும், நித்திரவிளையில் 38 பேரும், மணக்காலையில் 25 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குளச்சலில் ரீத்தாபுரம் அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் அண்ணாசிலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட நகர ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரதீப்குமார் தலைமையில் நகர பா.ஜனதா தலைவர் கண்ணன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்டதாக சிவசேனா நகர தலைவர் சுபாஷ், முருகன் உள்பட 36 பேர், கொட்டாரம் சந்திப்பில் மாவட்ட பா.ஜனதா செயலாளர் விசு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் தடிக்காரன்கோணம் சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட 40 பேர், துவரங்காடு சந்திப்பில் 8 பெண்கள் உள்பட 27 பேர், இறச்சகுளம் சந்திப்பில் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆரல்வாய்மொழி சந்திப்பில் மண்டல பா.ஜனதா தலைவர் மாதேவன்பிள்ளை தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

சுசீந்திரத்தில், பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். தெங்கம்புதூரில் பா.ஜனதா மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெகநாதன் தலைமையில் 23 பேரும், ராஜாக்கமங்கலத்தில் 24 பேரும், மேலசங்கரன்குழியில் 12 பேரும், கருங்கலில் பா.ஜனதா மாவட்ட பார்வையாளர் சுதர்சிங் உள்பட 39 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 50 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 486 பேர் பெண்கள் ஆவர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story