தொப்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கூலித்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு


தொப்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: கூலித்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 9:06 PM GMT)

தொப்பூர் அருகே பட்டப்பகலில் கூலித்தொழிலாளி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த நகை, பணத்தை திருடிச்சென்றனர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ளது பாகல்பட்டி. தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாது (வயது 50). மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி.

இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், பச்சையப்பன், லோகநாதன், சுரேஷ்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று காலையில் வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.

மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க காசு, மோதிரம் உள்பட 5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம், வேட்டி, சட்டை உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுபற்றி தொப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story