ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:15 PM GMT (Updated: 11 Oct 2018 7:27 PM GMT)

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குறைவான அளவு நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் கொண்டு வந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் தேங்கி கிடக்கிறது. மழையில் இந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யக்கோரி அப்பகுதி விவசாயிகள் நேற்று மதியம் கருக்காடிப்பட்டி பாலம் அருகே வெட்டிக்காடு-தஞ்சை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முத்துஉத்திராபதி தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story