கருத்துக்கேட்பு கூட்டமே கூடாது என்று நினைக்கிறார்கள் : அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாது


கருத்துக்கேட்பு கூட்டமே கூடாது என்று நினைக்கிறார்கள் : அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாது
x
தினத்தந்தி 11 Oct 2018 9:30 PM GMT (Updated: 11 Oct 2018 8:43 PM GMT)

கருத்துக்கேட்பு கூட்டமே கூடாது என்று நினைக்கிறார்கள் என்றும், அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் வைகோ தெரிவித்தார்.

வத்தலக்குண்டு, 


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் வரட்டும் என்கிற முறையில் கருத்துக்கேட்பு கூட்டமே கூடாது என்று நினைக்கிறார்கள். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மக்களின் அடிப்படை கடமை என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் அரசு சாரா அமைப்புகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கருத்துக் கேட்பில் பிரச்சினை செய்கிறார்கள். ஆகவே இந்த கருத்து கேட்பு முறையையே ரத்து செய்துவிடுங்கள் என்று மத்திய அரசே சொல்லத்துணியாத நிலையில் இத்தகைய துரோகத்தைச்செய்து, தமிழ்நாட்டை பாழ்படுத்த துடிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு மன்னிப்பே கிடையாது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிற அ.தி.மு.க. அரசைப்போல வஞ்சகம் செய்யும் அரசு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இதுவரை தமிழகத்தில் இல்லை. சுதந்திரத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பரந்துபட்ட சென்னை மாகாணத்தில்கூட யாரும் துரோகம் செய்தது இல்லை. மொத்த தமிழகத்தையே பாலைவனமாக்கி, பஞ்சப் பிரதேசமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து, காவிரி தீரத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என்று பல திட்டங்களால் தமிழகத்தை நாசமாக்குகின்ற வகையில் மத்திய அரசு செயல்படும்போது, அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமைக்கு மாறாக வேலியே பயிரை மேய்வதைப் போல தமிழகத்துக்கு கேடு செய்யும் அ.தி.மு.க. அரசை ஆட்சியிலிருந்து விரைவில் அகற்றுவது ஒன்று தான் தமிழக மக்களின் கடமையாகும்.

தொழில் முனைவோர் அனைவரும் ராஜ் பவனுக்கு வந்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியதற்கு, நீங்கள் என்ன புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா? என்று அன்றைக்கு கேட்டேன். வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று ஆலோசனை செய்திருக்கிறார் புரோகித்.

எந்த வழக்கறிஞர் என்ற பெயரைச்சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல்-அமைச்சரையும் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி இருக்கிறார். தமிழக கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் எச்சரிக்கை செய்கிறேன், நக்கீரன் கோபால் தனிநபர் அல்ல. பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதி. பத்திரிகை, தொலைக்காட்சி குரல் வளையை நெறிக்க முயல வேண்டாம். உங்களைவிட சர்வ வல்லமை பெற்ற பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன. விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story