தஞ்சை மாவட்டத்தில் 4-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் கலெக்டர் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் 4-வது கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2018 10:45 PM GMT (Updated: 14 Oct 2018 7:17 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக 4-வது கட்டமாக சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் இடையக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பாக பொது மக்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகரம், கண்டியன் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும், பெருமாள் கோவில் தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும், பின்னர், பேராவூரணி தாலுகா கட்டயங்காடு உக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திலும் ஆய்வு செய்து பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக வரப்பெற்ற விண்ணப்ப படிவங்களின் விவரங்களை கலெக்டர் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து பெருமகளுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு செய்து, அப்பகுதியில் கிராம பணியாளர்களை கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை கண்டறிந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வருவாய்த்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, தனித்துணை கலெக்டர் (முத்திரைக்கட்டணம்) லலிதா, தாசில்தார்கள் சாந்தகுமார் (பட்டுக்கோட்டை) பாஸ்கரன் (பேராவூரணி) ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story