விசாரணைக்கு அழைத்து வந்த ரவுடி போலீஸ் நிலையத்தில் சாவு உறவினர்கள் போராட்டம்


விசாரணைக்கு அழைத்து வந்த ரவுடி போலீஸ் நிலையத்தில் சாவு உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2018 11:00 PM GMT (Updated: 14 Oct 2018 7:21 PM GMT)

சென்னை எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பிரபல ரவுடி இறந்தார். அவரது உறவினர்கள் போலீசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி, பி.வி. காலனி 2-வது தெருவைச் சேர்ந்த அசாம் பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 28). பிரபல ரவுடியான இவர் மீது எம்.கே.பி.நகர், வியாசர்பாடி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.

மேலும் இவர் வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த சாலமோன் என்பவரை ஒரு ஆண்டுக்கு முன்பு சோழவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆட்டந்தங்கள் கிராமத்தில் கொலை செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளி ஆவார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு எம்.கே.பி.நகர் பகுதியில் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி அருண்பாண்டியன் ஆகியோர் கத்தியுடன் சுற்றித்திரிந்ததாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர். இருவரையும் கத்தியுடன் எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் குடிபோதையில் இருந்ததால் போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது கார்த்திக் மயங்கி விழுந்ததாகவும், அவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனால் போலீசார் கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீஸ் விசாரணையின்போது கார்த்திக் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு நேற்று இரவு 8 மணிக்கு பின்னரே தெரியவந்தது. இதனால் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீஸ் நிலையத்தில் உரிய அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அம்பேத்கர் கல்லூரி சிக்னல் அருகில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையம், மரணம் அடைந்த கார்த்திக் வீடு ஆகிய பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

விசாரணை கைதி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. ராஜேந்திரன் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

போலீஸ் நிலையத்தில் விசாரணையின்போது கைதி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story