கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி இளம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் பட்டியல் பார்வையாளரிடம் வலியுறுத்தல்


கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி இளம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் பட்டியல் பார்வையாளரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2018 10:45 PM GMT (Updated: 14 Oct 2018 9:26 PM GMT)

கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி இளம் வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம் வலியுறுத்தப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஆனந்த்ராவ்விஷ்ணு பாட்டில் நேற்று தர்மபுரி வந்தார்.

முதல் கட்டமாக அவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்க வேண்டும். இதற்காக அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம் நடத்தி இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர்கள் சிவனருள், புண்ணியகோட்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து ஏ.ஜெட்டிஅள்ளி, தொப்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆனந்த்ராவ்விஷ்ணு பாட்டில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் பாகம் திருத்தம் ஆகியவைகள் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், தாசில்தார்கள் பழனியம்மாள், ராதாகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் முல்லைக்கொடி, சுதாகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணன், ஆனந்தன் உள்ளிட்ட மைய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Next Story