30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2018 10:45 PM GMT (Updated: 15 Oct 2018 7:25 PM GMT)

தஞ்சையில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன், இணைச்செயலாளர் ராமலிங்கம், வருவாய்த்துறை அலுவலர் சங்க செயலாளர் தரும.கருணாநிதி, துணைச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

பொது வினியோகத்திட்டத்திற்கு என தனித்துறை அமைக்கப்படவேண்டும். கூட்டுறவுத்துறை, ரேஷன்கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்படவேண்டும். ரேஷன்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் எடையிட்டு வழங்க வேண்டும்.

பயோமெட்ரிக் டிஜிட்டல் ரேஷன் கார்டு உள்ளிட்ட பொது வினியோகத்திட்டப்பணிகள் அனைத்தும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 762 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 141 கடைகளில் உள்ள பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் தற்காலிக பணியாளர்களை கொண்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

Next Story