வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி: தமிழகம் முழுவதும் 23-ந் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி


வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி: தமிழகம் முழுவதும் 23-ந் தேதி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 9:20 PM GMT)

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சிப்பதை கண்டித்து வருகிற 23-ந் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

கரூர்,

தற்போது சரஸ்வதிபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதையொட்டி, தனியார் ஆம்னி பஸ்களில் அதிகளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கவர்னர் மாளிகை சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. நிர்மலாதேவி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தமிழக கவர்னர் மீது எழுந்துள்ளன. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும். நிர்மலாதேவி யாருடைய தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்? என்பதை கண்டறிய வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் மக்களின் கருத்தை கேட்டு செயல்படுத்த வேண்டும். மத்திய அரசின் அதிகாரத்திற்கு அடிபணிந்து செயல்படுவதை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் இதற்கான எதிர்விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும்.

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி நடக்கிறது. மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. இதனை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வருகிற 23-ந் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ரபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. மடியில் கணம் இல்லையென்றால் இதனை ஏற்று மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story