மும்பையில் மலேரியா, டெங்குவை ஒழிக்க ரூ.42¼ கோடிக்கு பூச்சி கொல்லி மருந்து


மும்பையில் மலேரியா, டெங்குவை ஒழிக்க ரூ.42¼ கோடிக்கு பூச்சி கொல்லி மருந்து
x
தினத்தந்தி 16 Oct 2018 10:24 PM GMT (Updated: 16 Oct 2018 10:24 PM GMT)

மலேரியா, டெங்குவை ஒழிக்க ரூ.42¼ கோடிக்கு மும்பை மாநகராட்சி பூச்சி கொல்லி மருந்து வாங்க உள்ளது.

மும்பை,

மும்பையில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் டெங்கு, மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் மும்பையில் 2 ஆயிரத்து 317 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாக மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கொசுவால் பரவும் டெங்கு, மலேரியாவை தடுக்க மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக டெங்கு, மலேரியாவை உற்பத்தி செய்யும் கொசுவை ஒழிக்க, மும்பை மாநகராட்சி ரூ.42 கோடியே 29 லட்சம் செலவில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தை வாங்குகிறது. மாநகராட்சி வாங்க உள்ள பூச்சிக்கொல்லி மருந்தின் விலை ஒரு லிட்டர் ரூ.1,940 ஆகும். மாநகராட்சி மொத்தம் 2.18 லட்சம் லிட்டர் பூச்சி கொல்லி மருந்தை வாங்க உள்ளது. இந்த மருந்தை ஒப்பந்ததாரர் ஒரு ஆண்டில் 3 முறை பிரித்து வழங்க வேண்டும்.

கொசு உற்பத்தியை தடுப்பதற்காக இந்த மருந்துகள் மும்பை பெருநகரம் முழுமையும் தெளிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story