அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தூத்துக்குடி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்


அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தூத்துக்குடி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 17 Oct 2018 9:30 PM GMT (Updated: 17 Oct 2018 12:40 PM GMT)

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தூத்துக்குடி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, 

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தூத்துக்குடி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

சிறப்பு முகாம்கள்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை முறைப்படுத்த, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 23, 24–ந் தேதிகளிலும், தெற்கு மண்டல அலுவலகத்தில் 30, 31–ந் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது.

இந்த முகாம்களில் மனைஉரிமையாளர்கள் மனைப்பிரிவு வரைபடம், சுற்று சார்பு வரைபடம், பத்திர நகல், பட்டா சிட்டா நகல், மற்றும் வில்லங்கசான்று ஆகியவற்றுடன் வந்து பதிவேற்றம் செய்து உரிய கட்டணங்களை செலுத்தி விண்ணப்பித்து மனைகளை வரன்முறைப்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

அரசு சலுகைகள்

பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களது மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் மனையில் கட்டிடம் கட்ட இனி வருங்காலங்களில் கட்டிட வரைபட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வரி விதிப்புகள் மற்றும் இதர அரசு சலுகைகள் எதுவும் வழங்க இயலாத நிலை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story