நாடாளுமன்ற தேர்தலிலும் காங்.-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி தொடரும் தேவேகவுடா, சித்தராமையா கூட்டாக அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலிலும் காங்.-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி தொடரும் தேவேகவுடா, சித்தராமையா கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2018 11:15 PM GMT (Updated: 20 Oct 2018 9:29 PM GMT)

நாட்டின் நலனுக்காக வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல் படுவோம் என்றும், நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும் என்று தேவேகவுடா, சித்தராமையா கூட்டாக அறிவித்தனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது.

மாநிலத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று தனியார் ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களான தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.

அப்போது தேவே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

நானும், சித்தராமையாவும் 12 ஆண்டுகளுக்கு பின்பு ஒரே மேடையில் அமர்ந்துள்ளோம். மாநிலத்தில் கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சி அமைந்த பின்பு மாநிலத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. 5 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவது உறுதி. நாட்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு ஏராளமான பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது. இதற்காக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும். நாட்டின் நலனுக்காக கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்து செயல்பட முடிவு எடுத்துள்ளோம். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் இடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம். நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி தொடரும்.

தலைவர்கள் கூட்டணி அமைத்தாலும் தொண்டர்கள் இடையே மனகசப்பு இருப்பதாக சொல்கிறார்கள். தொண்டர்களுக்குள் சிறு, சிறு பிரச்சினைகள் வருவது சகஜம் தான். அதனால் கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு ஒற்றுமையாக செயல்படுவோம் என்று தொண்டர்களிடம் எடுத்து கூறப்படும். எங்களை மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்வோம். இந்த கூட்டணி வெற்றி பெற மக்கள் ஆசிர்வாதம் கொடுக்கும்படி கேட்கப்படும்.

இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இதன்மூலம் மதசார்பற்ற கட்சிகள் கர்நாடகத்தில் ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றுள்ளது என்பதை மற்ற கட்சிகளுக்கும் தெரிவிப்போம். 2 கட்சிகளுக்கும் உள்ள பழைய பகை பற்றி பேச விரும்பவில்லை. அதனை மறந்து ஒற்றுமையாக செயல்பட தீர்மானித்துள்ளோம். கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பது போல, மற்ற மதசார்பற்ற கட்சிகளும் ஒன்று சேர்வது உறுதி.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

இதையடுத்து, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அடித்தளம் இதுவாகும். மதவாத கட்சியான பா.ஜனதா ஆட்சிக்கு வரக் கூடாது. பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் ஓட்டுகள் சிதறக்கூடாது. அவ்வாறு ஓட்டுகள் சிதறினால் பா.ஜனதாவினர் லாபம் அடைந்து விடுவார்கள்.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களது முயற்சியை கைவிடவில்லை. மதவாத கட்சியால் நாட்டிற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ சாத்தியமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 28 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும்.

பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. ஏழை, நடுத்தர மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. விவசாயிகள் பிரச்சினையை பிரதமர் மோடி காது கொடுத்து கேட்பது கூட இல்லை. பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக சேர வேண்டும். மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பில்லை. பா.ஜனதாவின் வெற்றியை தடுக்கவே நாங்கள் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

பா.ஜனதா கட்சி தான் எங்களது எதிரி. எதிரி என்றால் அரசியலில் மட்டுமே. சொந்த காரணங்களுக்காக பிரதமர் மோடியும், எடியூரப்பாவும் எதிரி அல்ல. அரசியலில் அவர்கள் எதிரிகள். அவர்களை தோல்வி அடைய செய்வது நமது கடமையும், பொறுப்பும் ஆகும். கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் இல்லை. அதுபோல, கட்சி தொண்டர்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் வெற்றிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story