ஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேர் கைது


ஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 6:06 PM GMT)

ஆபாச வார்த்தைகளுடன் மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் குமார்(வயது 29). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த பள்ளியில் பணியாற்றிய போது 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் குமாரை பணி நீக்கம் செய்தது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த மாணவியை பழி வாங்க நினைத்தார். அது குறித்து தனது நண்பரான பாலக்கோடு ஒன்றியம் சோமனஅள்ளியை சேர்்ந்த கோவிந்தசாமி (39) என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் கொடுத்த ஆலோசனையின்படி குமார், கோவிந்தசாமியிடம் இருந்து போலி சிம் கார்டுகளை வாங்கி அதிலிருந்து அந்த மாணவியிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

குமார், கோவிந்தசாமி ஆகியோர் மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியதோடு, மாணவி குறித்து அவதூறு பரப்பி வந்துள்ளனர். மேலும் முகநூலில் (பேஸ்புக்) அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாச வார்த்தைகளுடன் வெளியிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், இவருடைய நண்பர் கோவிந்தசாமியை ஆகியோரை கைது செய்தனர்.

Next Story