‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்


‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்தேன்’ கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 Oct 2018 12:00 AM GMT (Updated: 21 Oct 2018 7:49 PM GMT)

ஆசைக்கு இணங்க மறுத்ததால் மாடல் அழகியை கொலை செய்ததாக கைதான கல்லூரி மாணவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

மும்பை,

மும்பை மலாடு பகுதியில் கடந்த 15-ந் தேதி சூட்கேசில் அடைத்து வைத்து வீசப்பட்ட இளம் பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். விசாரணையில், அந்தபெண் 20 வயதான மாடல் அழகி மான்ஷி தீக்சித் என்று தெரியவந்தது. ராஜஸ்தானை சேர்ந்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மும்பை வந்துள்ளார். மாடலிங் துறையிலும், சினிமாவில் சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார்.

மாடல் அழகியை கல்லூரி மாணவர் முசாமில் சையத் (19) என்பவர் கொலை செய்து உடலை வீசி சென்றது தெரியவந்தது. அவரை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். முதலில் அவர் மான்ஷி தீக்சித் செக்ஸ் உறவுக்கு மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக தெரிவித்தார். பின்னர் அது கொலைக்கான காரணம் இல்லை என மறுத்தார்.

இந்தநிலையில் அவர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நான் புகைப்பட நிபுணர் என கூறி மாடல் அழகியிடம் சமூகவலைதளம் மூலமாக அறிமுகம் ஆனேன். நல்ல புகைப்படங்கள் இருந்தால் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், அதற்காக மாடல் அழகிக்கு இலவசமாக போட்டோக்கள் எடுத்து தருவதாகவும் கூறினேன்.

இதை உண்மையென நம்பி மாடல் அழகி போட்டோ சூட்டிற்காக சம்பவத்தன்று எனது வீட்டிற்கு வந்தார். அப்போது போட்டோ சூட்டிற்கு தயாராக ஆடைகளை மாற்றி வருமாறு கூறினேன். அவர் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி இருந்தேன். இதை மாடல் அழகி பார்த்து விட்டார். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது நான் புகைப்பட கலைஞர் இல்லை என கூறினேன். மேலும் மாடல் அழகியிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறினேன். இதை கேட்டு ஆத்திரமடைந்த மாடல் அழகி என் மீது போலீசில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். இதையடுத்து இரும்பு நாற்காலியால் மாடல் அழகியை அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை சூட்கேசில் அடைத்து வாடகை கார் பிடித்து வீசி விட்டு வீடு திரும்பினேன். இதையடுத்து போலீசில் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைதான கல்லூரி மாணவர் முசாமில் சையத்தின் போலீஸ் காவல் இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Next Story